கடப்பு வைச்சு
காத்திருந்த வேளை – மர்மமாய்
கழுத்திறுகி இறந்தது ஓர் ஆடு.
கள்வரும் அது கண்டு..
கட்டியே இழுத்துச் சென்றார்.
கண்ணியமாய் நீதி உண்மை விளம்ப முன்..!
கள்ளுக் கடையருகில்
கள்ளக் கடை விரிச்சு
கள்ளாடும் ஆனது பங்கிறைச்சி.
கள்ளின் வெறியதில்
கழிவு விலை கேட்ட இடத்தில்
கன்னம் பறக்க
கதறி அழ
கட்டிப்புரண்டு..
கண்டபடி நடந்தது அடிபாடு.
களத்திலும் அது
கதை.. கட்டுரை என்றாக
கடைசியில்
கன்னம் பழுத்த கூட்டம்
கழுதைக் கத்தல் கத்துது
கதைகள் பல விடுகுது…
கள்ளாட்டுக்கும்… யாரும் உரிமை கோரவில்லை..
கறுத்தாடு அதுவும் கோரை தின்றே.. “கேர்ணல்” ஆனது என்று.
களவெடுத்தது நாமும் அல்ல
கள்வரும் அல்ல – நாம்
கண்ணியமானவரே என்று.
கடைக்கண் விழி திறந்து
கவனமாய் சிரிக்குது நீதி…
கள்வர்கள் கூட்டத்தின் களிப்பதில்
கணவான் புத்தனும் மயங்கினனே என்று.
கண்டபடி உளறிவிட்டால்…
காணக் கேட்க யாரும் இல்லை என்றால்
கனவும் நிஜமாயே நிற்கும்
கழுதை கூட ஏரேபிளேன் ஓட்டும்..!!!
கல்வி கற்றும்
கல்லாமை மேவி நிற்கும்
கண்றாவிக்
கல் தோன்றாக் காலத் தமிழரிடம்..!
கற்காலம் தவறாமல் தற்காலமும் நிற்கும் தமிழரின்…
கனவுத் திரை விலக்க
கதிரவனாய் ஒருவன் வர வேண்டும்..
கள்வர் கூட்டம் கலைந்தோடும்
களிப்பான நேரம் அதுவாக வேண்டும்…!
கணமேதும் தவறாமல் அது நடக்க
கடவுளிடம் வேண்டுதலே
கடன் என்றாகி நிற்கிறது இன்று..
கள்வர்கள் காலம் இதுவென்பதால்..!