முள்ளிவாய்க்கால் முடிவல்ல…தொடக்கம்..சாத்தியமானது இன்று.

429580_448087988602629_699388762_n.jpg

முள்ளிவாய்க்கால் தனில்

அழித்திட்டோம்

புலிக் குகை

கலைத்திட்டம்

தமிழ்க்குடி..

எக்காளமிட்டது

துட்டகைமுனு வம்சம்..!

கலைத்திட்டது

தமிழ் குடியல்ல

தேன்கூடு..

தமிழ் உலகெங்கும் – அது

கட்டுது வதைவதையாய்

பெரும் கூடு..!

தேடி வந்து

அழித்த பகை

திகைத்து நிற்கும்

தருணங்கள் பல

காத்திருக்குது..!

 

வெற்றி முழக்கமிட்ட

சிங்களம்

விழி பிதுங்க

முழங்குது

விடுதலைக் கோசம்

தமிழ் மாணவர் பாசறையெங்கும்..!

செம்மொழியாம்

தமிழ் மொழியில்

தாய் நிலமாம்

தமிழகத்தில்

மையம் கொண்டு….!

 

வீழ்த்திவிட்டோம்

சோழப் பெருங்கொடியாம்

புலிக்கொடி..!

மமதையில் நின்ற

மகிந்த கூட்டம் முன்னிலையில்

பறக்குது 

மீண்டும் புலிக்கொடி

சர்வதேசம் எங்கும்..!

 

உச்சரிக்கக் கூட

முடியாது..

பிரிவினையின்றி

ஒட்டிவிட்டோம்

உடைந்த தேசத்தை

ஆயுத ஆக்கிரமிப்பு

கொண்டு அடக்கிவிட்டோம்

தமிழர் உணர்வுகளை

குதூகலித்த சிங்களம்

குறுகி நிற்குது

தமிழீழ முழக்கம்

ஐநா வரை எட்டுவதால்..!

 

ஆயுதத்தால் பேசி

அடக்குமுறையால் அழித்து

பேரின வெறியை திணித்து

ஹிட்லரென்ன

மகிந்தரென்ன

யுத்த வெறியில்

காண்பது வெற்றியல்ல

சொந்தத் தலைக்கே

வேட்டு..

சொன்னது பழைய வரலாறு

இருந்தும்

கேள் புத்தியற்றோர்

திரும்பப் படித்திட

எழுதுது

தமிழினம் – இன்று

புதிய சரித்திரம்

ஒற்றுமையின் புறப்பாடு கொண்டு..!

 

நேற்று வரை

தம்பியின் படையிருக்கு

விடிவு வரும்..

நம்பியிருந்த தமிழினம்

முள்ளிவாய்கால் தனில்

சிங்களப் பேரினம்

யுத்த வெறி கொண்டு

தமிழின இரத்தம் சுவைத்து

எழுதிட்ட முடிவுரைக்கு

எழுதுது – இன்று

புதிய

தொடக்கவுரை..!

 

“முள்ளிவாய்க்கால் முடிவல்ல

தொடக்கம்”

சிங்களத்தின்

வைகாசி வதை கண்டு

கவிஞன் ஒருவன்

செப்பிவிட்ட

செம்மொழி

சாத்தியமானது

சத்தியமானது இன்று..!

577947_595378593807503_407160963_n.jpg

விடுதலைக்கு

விதையாக்கி

புதைத்துவிட்டோம்

பல்லாயிரம் உயிர்களை..!!

கற்புக்காய் ஊரையே எரித்திட்ட

கண்ணகி வரிசையில் அன்றி

இனத்திற்காய்

தன்னையே எரித்திட்ட

தீரரின் நினைவொடு..

தீயுக்கும் ஆங்கே

உடல் தனைக் கருக்கி

உயிர் தருதல் விட்டு

உறவுகளே

ஒற்றுமையால்

உரைத்து நிற்போம்

உலகம் ஏற்க..

தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம் என்றே..!

 

45563_501120533268764_1706233359_n.jpg

படங்கள்: முகநூல்

Leave a comment »

அதிகார வர்க்கங்கள் பேசும் மொழி ஒன்று தான்.

295580_10151318437272944_842806401_n.jpg

ஆண்ட இனம்

அடிமைப்பட்டுக் கிடக்க

அது அரசிழந்து

ஆட்சி இழந்தது

மட்டுமா குற்றம்..?!

அது சக்தி இழந்து

கிடப்பதும் குற்றமே..!

 

எழுச்சி கொள்

மாணவ இனமே

குமுறும் இந்தக்

குரல்களுக்கு..

சக்தி கொடு

ஈழ தேசமதில்

ஒரு விடுதலைப் பூப் பூத்திட…!

 

அதிகார வர்க்கத்தின்

பேசும் மொழி

அடக்குமுறை..

காக்கிச் சட்டைகள்

அதன் ஏவு இயந்திரம்..

அவை எதிர்த்து நில்

அமைதி வழியில்..!!

வரும் துயர் தாங்கி நில்

சக்தி காட்டி நில்…

மாணவர் ஒற்றுமையில்..!

 

பொங்குவோம்

நாம் தமிழராய்

தரணியெங்கும்

நீதி செப்பி

மானுடம் போற்றும்

தமிழினம் காக்கும்

தமிழீழ தேசம்

மீட்டிட…!

 

போஸ்டர்  மீளமைப்பு :- நெடுக்ஸ். இணைப்பு நன்றி:- முகநூல்.

Leave a comment »

நானும் இரண்டு பொண்டாட்டிக்காரன் தான்..!

580541_10152640454215055_1527080915_n.jp

தொட்டுவிட்டவள்

தொற்றிவிட்டவள்

என்றிரண்டு

பொண்டாட்டிங்க எனக்கு..!

எங்களுக்க

விவாகமுமில்ல

விவாகரத்துமில்ல

சண்டையுமில்ல

சச்சரவுமில்ல

கூவத் தெரிந்த நான்

கூனியதுமில்ல..

கொண்டை வைச்ச நான்

தலை சாய்த்ததுமில்ல..!

இவ்வளவைய

கட்டிமேய்க்கிறேன்

கனகாலமாய்..!

நானும்

இரண்டு பொண்டாட்டிக்காரன் தான். :lol:

Leave a comment »

சிறகொடிந்த சுதந்திரப் பறவைகளே..!

page_5.jpg

 

சிங்காரச் சிறகு விரித்து

சிறகடித்த வானம் அழுகிறது..

நர்த்தன நடை பயின்று

நடந்து திரிந்த பூமி கனக்கிறது..

சுதந்திர வானில்

உயரப் பறந்த நீங்கள்

உயிரற்ற உடல்களாய்

உடை களைந்து கிடந்தீர்

அங்கே…

புதையுண்டு போன  உண்மைகள்

விக்கித்து நிற்கின்றன

காட்சிகளோடு..

வினாக்கள் மட்டுமே மிச்சமாய்..!

 

தமிழீழ மண்ணில்

சென்ரி போட்டு

தாய் நிலம் காத்து நின்று

மக்கள்

கையெடுத்து கும்பிட்ட வாழ்ந்தீர்..!

இறுதியில்..

தாயக பூமியில்

பேரினப் பிசாசுகளின்

அடிமை விலங்கு

உங்களை…

விலங்கிலும் கேடாய்

நசுக்கிக் கொல்ல

கையறு நிலை சென்றோம் நாம்..!

இன்று

முற்றே கைவிட்டு விட்டோம்

தப்பியோர் உம்மில் பலரை

நட்டாற்றில்..!

 

தேச விடுதலை என்றும்

மகளிர் விடுதலை என்றும்

அடுப்படிக்கு ராரா என்றும்

நெற்றிப் பொட்டுக் கலைத்து

நீண்ட முடி வெட்டித்தள்ளி

பெண்ணியப் பாசறை அனுப்பி..

உசுப்பேற்றி விட்டோம்.

இடையில்

நாமோ பிளேன் ஏறிவிட்டோம்

வெளிநாட்டில்

குங்குமமும் தாலியும் தர

நல்ல மாப்பிள்ளை அமைந்து விட்டதால்..!

நீங்களோ…

கொள்கைக்காய்

பிறந்த மண்ணோடு வாழ்ந்துவிட

இன்று

கண்ணீரே வாழ்வாகி நிற்கின்றீர்.

 

நீண்ட பனர் பிடித்து

வருடா வருடம்..

மார்ச் 8 இல்

முழக்கமிட்டோம்..

வீர மிகு வசனம் எழுதி..

ஊர்திகள் பவனி வந்து

ஆணுக்கு நீவிரும்

சமன் என்றோம்…!

வந்த சிங்களப் காடையர் மத்தியில்

நீவிர் சீரழிந்த போது

சமத்துவம் செத்துப் போனது

உங்கள் அலறலில்..!

நாமோ..

இரண்டு நாள் ஆர்ப்பாட்டம்

மூன்றாம் நாள் ஆர்ப்பரிப்பு

நான்காம் நாள்

குத்தாட்டம் என்று ஆகிவிட்டோம்..!

 

சினிமாவில்

நடிகையின்..

அரைகுறை ஆடையில் தெரிவது என்ன

அழகா அசிங்கமா..

இதுவே இன்று எம் ஆராய்ச்சி..!

வரிப்புலிகளாய் நீங்கள்

வலம் வந்த போது

கண்ணில் பட்டீர்கள்

கருத்துள் நுழைந்தீர்கள்..!

உலக வல்லரசுகளின்

அடாவடித்தனம்

உங்களை..

சிங்களப் பாசறை தள்ள

ஓர் நாள் தடுப்பிருப்பினும்

நீவிரும் ஆனீர்

நடிகையிலும் கேடாய்..!

இப்போ

உம்மை நாம்

அர்ச்சிக்கிறோம்

பூக்களால் அல்ல

இழிவு வார்த்தைகளால்..!

 

தேச விடுதலையொடு

பெண் விடுதலை

தேடிப் பறந்த சுதந்திரப் பறவைகளே..

இன்று..

சிறகொடிந்தும்

தலை இழந்தும்

கற்பிழந்தும்

காலிழந்தும்

கடைசியில்

வாழ் விழந்தும் போன

எங்கள் சிங்காரச் சிட்டுக்களே..

சிறையிலும் தெருவிலும்

கிணற்றிலும் குடிசையிலும்

தூக்கிலும் வாழும் எம்

காவல் தெய்வங்களே..

உங்களின் வலி உணர்ந்து பாடுகிறேன்

இந்தப் பாடல்

உங்கள் வலி தீர்க்கும்

மருந்தாய் அன்றி

மானுட நேயம்

உங்களை அரவணைக்கும் என்ற

அற்ப ஆசையில்..!

Leave a comment »