Archive for நவம்பர் 14, 2012

ஐநா என்ன அரிவரிகள் கூடமா..??!

பாங்கியும்
நம்பியும்
தம்பி
நாராயணனும்
போட்ட திட்டம்
தமிழர் குருதி
பெருக்கி..
சிவந்தது
செங்கடல் அல்ல
நந்திக் கடல்..!

எல்லாம் முடிந்த பின்
மூடி மறைக்க 
ஓர் அறிக்கை
மறைத்ததை மூட
ஓர் அறிக்கை
மூடியதை மறைக்க
இன்னோர் அறிக்கை..
மொத்தம் எத்தனை..??!

இடைக்கிடை
அருண்ட தேசத்துள்..
அமைதிப் புறாவை
கட்டி இழுத்து வர
ஆயிரம் தோறணைகள்.
சிங்களப் பேரினப் பசிக்கு
சீனத்து ரகன்களின்
தீச் சுவாலைக்கு
அசோகச் சக்கரத்தின்
அரக்கத்திற்கு
அத்தனையும் பலி..!

காலத்தே தெரிந்து 
ஓர் தப்பு
காலம் கடந்து
ஓர் அறிக்கை..
காலம் கடத்தி
கற்பது பாடம்..!
கற்றபின்
பதவி உயர்வு தந்து 
நிற்பது கடன்…!
இப்படியே போனால்
உலக அமைதி
என்பது
மானிடர் 
மாண்ட பின் தான்..!

ஐநா 
உலக அமைதிக்கு
ஓர் சபை…
இப்படியும் 
ஓர் இடி முழக்கம்..!
அணுகுண்டின் அழிவில்
அமைதிக்கு
அர்த்தம் கற்ற
கூடமல்லவா..!
முள்ளிவாய்க்கால்
பேரழிவில்
அறிக்கைக் கூடமாவது
விசேடம் இல்லை..!

இன்னும் இன்னும்
மனித அழிவில்
ஆரம்பப் பாடம் கற்க
ஐநா என்ன
அரிவரிகள் கூடமா..?!
மக்கள் வரியில்
அப்படி
ஏன் ஓர் அமைப்பு..?!
பதவிகளால்
பிசாசுகளை
அலங்கரிக்கவா..??!

ஐநா
அமைதிப் புறாக்களாய்
வல்லூறுகளும்
கழுகுகளும்
பாங்கிகளும்
நம்பிகளும்..
இவைகளை நம்பி
தமிழர்
கோழிக்குஞ்சுகளாய்
இரையாவது
நிற்கட்டும்..!

சாண்டிப் புயலுக்குள்
சிக்கிய
நியோர்க்காய் அன்றி
அறிக்கைப் புயலுக்குள்…
எச்சரிக்கை பெறுவோம்
புதினம் படிப்போம்
அறிவை வளர்ப்போம்
அனுபவம் பெறுவோம்
அடையும் இலக்கை
நெருங்க
உப வீதி சமைப்போம்..!
அதுவே
தமிழருக்கு
நற்றுணையாகும்..!
மாண்ட வீரர்
கனவு பலிக்கும்..!

மறக்காமல்.. இந்த இணைப்பையும் பாருங்கள்……….. http://kck.st/SLNEWp

Leave a comment »