எங்களுக்கும்
ஆயிரம் ஆசைகள் உண்டு..
அதில்
கட்டுநாயக்கா போய்
கடல் கடந்து
அந்நியப்பட்டு
அந்நிய தேசத்தில்
கடவுச்சீட்டொன்றில்
வதிவிடம் வாங்கி
களித்துப் பின்
கலியாணம் கட்டி
இசைஞானியின்
காதல் இசையில்
கருத்தால் மயங்கி
கலவி செய்து
கலந்திப்பதும் ஒன்று…!
ஆனாலும்
கால்கள் நகர மறுத்தன.
காலம்
தடுத்து நிறுத்தின.
அன்னை தேசம்
அடிமை விலங்கு தாங்கி
அழுது புலம்பும் நிலை
அனுதினமும் அமைதி குலைத்தது…!
கழுத்தில்
நஞ்சு கட்டி
களமதில்
கருவி ஏவி
சாவு பல கண்டோம்
ஏன்…..
கார்த்திகை 27 இல்
எமக்கு
ஓர் நாள்
கழிப்பு கழிப்பீர் என்றோ..???!
கல்லறைகள்
வரிசையாய்
அடிக்கி நிற்கும்
கோலம்..
எம் கால்களின்
அணிவகுப்பினைச் சொல்லும்..
அது கூட – இன்று
எதிரி காலடியில்..!
தேசப் புதல்வர்தம்
வித்துடல்களின்
குருதியாற்றின்
ஈரப் பெருக்கம்
கார்த்திகைப் பூவின்
செந்நிறமாகி..!
இந்த வேளையும்
இசைக்க ஒரு
கானம் இருக்குது..
மோகமோ
முகாரியோ அல்ல
தேச பக்தியே அது..!
அண்ணல் காந்தியின்
வீரத்துக்கு
தேச பக்தி கொண்டெழும் உறவுகள்
என் தேச பக்திக்கு
பதில் சொல்ல..
மணிக்கணக்கு தேடுகிறார்
Money தான் முதன்மை என்கிறார்..
பிழைக்கத் தெரியாதவன்
நான் என்கிறார்..!!!
இல்லை இல்லை..
நாங்களோ
இசை ஞானமில்லா
சூனியங்கள் என்கிறார்
ஆணவத்தின்
வடிவம் என்கிறார்.
இன்னும் என்னென்னவோ
எல்லாம் சொல்கிறார்.
ஆம்…
உங்கள் வார்த்தைகள்
உண்மை தான்..
எம்மோடு இருப்பதோ
எம் தேகம் கூட இல்லை
தேச தாகம் மட்டுமே…!!!
தேசம் ஒன்று இன்றேல்
இந்த ஞானத்தின் சரிவு
காலத்தால்
உடலழிவில் நிகழும்..!
நில அழிவோ
பறிப்போ
இன அழிவில்
முடியும்..!
இசைக்க ஆளுமற்ற
கேட்க யாருமற்ற
வெற்றிடம்
ஓர் நாள் மிஞ்சும்..!
சிந்தியுங்கள்..
ஞானிகளே
அவர்தம் சீடர்களே..!
கேளுங்கள்
தோழர்களே…
கார்த்திகை
எமக்கு
உயிர்..!
அதன் நனிகுளிர்
காற்றில் கலந்திருப்பது
வெறும் நீர்த்துளி அல்ல
எம்
உயிர்த்துளி..!
காற்றாய் வீசுவது
உப்புத் துகள்கள் அல்ல
எம் கல்லறை
மூச்சுக்கள்..!
காலம்
ஓர் நாள்
உண்மை
உணர்த்தும்..
இசைஞானம் அன்று
சேதி கேட்டு
உயிர் நீத்திருக்கும்..!
இது சாபம் அல்ல
சரிதம்..!