
யாழ் நகர் இந்துக்கல்லூரி
பல கலை பயில் கழகமும் அதுவே
தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே
கீதம் இசைத்த கல்லூரி…!
நல்லூரின் வீதியிலே
இராசையா திலீபனை
பட்டினிப் போரிலே கிடத்திய கல்லூரி..!
பொன்னம்மான் தொடங்கி…
பல நூறு வேங்கைகள்
தமிழீழக் களத்தில் அணிவகுக்க
அழகு பார்த்த கல்லூரி..!
ஒப்பரேசன் லிபரேசனிலே
ராதா என்ற சாதனையாளனை
சரித்திரமாக்கிய கல்லூரி..!!
இன்று..
கிரிக்கெட் தொடர் என்று
ஆனந்தாவோடு
போடுவதென்ன.. சதிராட்டமா..???!
ஆனந்தாவின்
சிங்கள மைந்தர்கள்
கோத்தபாய முதல்
பொன்சேகா கண்டு
பசில் ராஜபக்ச வரை..
பேரினச் சிங்களச் சேனையின்
மூத்த இனவெறியர்கள்..!
அன்னையே தெரியுமா
அந்தச் சேதி உந்தனுக்கு..!
தமிழினக் கொலையின்
போர்க்குற்றவாளிகள்
வேறு யாருமல்ல
றோயலும் ஆனந்தாவும்
உந்தித் தள்ளிய
சிங்கள இனவெறியர்கள்..!
அன்னையே புரியுமா
அது உனக்கு..!
இன்று நீயோ..
சிங்களச் சேனையின் அடிவருடி..
பொட்டு வைச்சு
மாலைபோட்டு
குனிஞ்சு கும்பிட்டு..
பந்தாடுறாய்..!
அது பந்தல்ல
தமிழர் வாழ்வுரிமை
விளங்குமா உனக்கது..!
இரண்டு இனிங்ஸில் முடிய
அது விளையாட்டல்ல
நூற்றாண்டுகள் பல கண்ட
வரலாறு ஆத்தா..!
தமிழர் தலைநிமிர
கீதம் இசைத்து நின்றவளே
வழிகாட்டி வந்தவளே..
இன்று தலை குனிய
வைத்தாயே..!
முள்ளிவாய்க்காலில் ஊற்றெடுத்த
தமிழர் இரத்த ஆறு
உந்தன் பாதம் நனைத்தும்
மதியிழந்தனையே..!!
சிங்கத்தின் கொடுவாளுக்கு
இரையாகி
வீழ்ந்த தமிழ்குடிகளின்
கணக்கு எண்ணி முடியமுன்னே
கொடியேற்றிக் கொண்டாட்டமா..??!
உனக்கேனிந்த அவசரம்
புத்தி பேதலித்ததுமேன் தாயே..!!!
உள்ளூரில் ஊட்டிய
போதையா
வெளிநாட்டில்
இருந்து வந்த
கட்டளையா..??!
ஆனந்தாவோடு
ஆனந்த நடனமாடும்
யாழ் இந்து அன்னையே…
சொந்த மகவுகளை
நாகர்கோவிலிலும்
செஞ்சோலையிலும்
நவாலியிலும்
ஆனந்தாவின்
கொலைவெறிக்கு..
பறிகொடுத்த பாவிகள் சார்பில்
உந்தன் மைந்தன் இவன்
பந்தடிக்கும் ஈனச்செயல் கண்டு..
ஏங்கித் துடிக்கிறான்..!
ஈனர்கள் சிலர்
உந்தன் பாதத்தின் புனிதம்
சிதைப்பதை
எனியும் நீ
அனுமதிப்பாயா..???!
இனியும் நீ
தறிகெட்டு ஆடினால்..
வேண்டாம்
உந்தன் தொப்புள்கொடி உறவு..!
உடனடியாய்
தொடர்பறுப்பேன்
மானத் தமிழிச்சி
மைந்தன் இவன்..
எனி எந்நாளும்
உச்சரிக்கேன்
“இவன் உன் மைந்தன்” என்றே..!!
இது எந்தன் முடிவமல்ல
யாழ் இந்து அன்னையே…
மானத்தமிழன்
ஒவ்வொருவன் முடிவும் ஆகும்..!

படங்கள்: jhc.lk