வரிப் புலிகள்
வாழ்ந்த காலம்..
விறகு வெட்டி
கட்டி
கண்டி வீதி வழி
நடுச்சாமம் தாண்டியும்
பெண்டிர் கூட
மிதித்து வைக்க
ஓடிய வண்டிகள்..
யாழ் நகர் வந்து சேர
செம்மணிப் பேய்கள் கூட
அமைதி காத்தன…!
வானரப் படைகள்
வாழும் காலம்..
விறகுவெட்டியும்
தூக்கில் தொங்குகிறான்
மாற்றான் மனையாளொடு
கட்டியணைத்தபடி.
பெண்டிர்
மிதிக்கா வண்டிகள்
பெற்றோலில் ஓட
பெற்றோர் ஓடுகிறார் அவர் பின்
பிள்ளை ஓடிப் போயிடுவாளோ
என்றே பதறியடித்தபடி.
செம்மணிப் பேய்களை
விஞ்சி..
கோத்தாவின்
ஏவல் பிசாசுகள்..
கிறீஸ் பூதங்களாய்
மகளிரை மட்டும்
குறிவைத்து
கருவறுக்கும் நிலை..!
தமிழினம்
ஈழத்தில்
வேரறும் நிலை…!
புட்டுக்கு
தேங்காய்ப் பூவாய்
இருந்த சமூகம் கூட
களமிறங்கும் நேரம்.
பெற்ற
தாய் நாட்டை விட்டு
பொருள் ஈட்ட..
அகதி என்ற அந்தஸ்தில்
மாற்றிடம் புகுந்துவிட்ட
சந்ததிக்கோ….
இச் சங்கதிகள்
வெறும் செய்திகளாக..!
ஒரு செவி புக
மறு செவி விடு
கதைகளாய் அவர்க்கு..!
வீதிகள் தோறும்..
சீறும் புலிக்கொடி தூக்கி..
செவிப்பறை வெடிக்க..
போட்ட கூச்சல்கள்..
வெற்று வேட்டுக்களாமோ..???!
வரிப் புலியும்
கூடேகி
சிக்கி விட்ட பின்..
எலிகளுக்கும்
பேய்களுக்கும்
பூதங்களுக்குமே கொண்டாட்டம்,
அவை
என்றும்..
சிங்களப் பேரினத்தின்
தத்துக்களே..!
எனி
கடவுள் தான் காக்க
வேண்டும்
எம் தமிழினத்தை….
மீள்கிறது
தந்தை செல்வாவின் காலம்..!
இருந்தும்..
இன்னும்
ஏமாறும்
மனிதர்களாய்..
மறப்போம் மன்னிப்போம்
மகான்களாய்
நாம்…
“தனிப் பெருமை” காக்கிறோம்.
யாழ் வைத்தியசாலைப் படுகொலைகளும்
செம்மணிப் புதைகுழிகளும்
முள்ளிவாய்க்கால் பேரவலமும்..
ஊர்க்கதை பேசும்
எமக்கு
திண்ணைகள் தோறும்
குந்திவிட்டு எழும்ப
தட்டி விடும்
தூசிகளாமே..!
சனல் 4 லும் இல்லையேல்
மகிந்த கூட
புத்த மகானாக…
மறந்து போயிருக்கும் எல்லாம்.
புலியாய் பாய்ந்த இனம்..
இன்று
பூனையிலும் கேடாய்…!
உயிர்க்குமோ..
மாண்டாரின்
மாண்மியம்..?!
திருந்துமோ
இவ்வினம்..??!
சந்ததிகள் கேட்குமோ
அல்லது
தந்திடுமோ..
கிழக்குச் சூரியனின்
உதயலில்
ஒரு தேசத்தின்
விடியற் செய்தி…??!
அதற்காய்
உழைக்குமோ
ஊர் சேர்ந்து
இல்லை….
என்றும் போல்
உறங்குமோ
இவ்வினம்
கனவினில்
கோட்டை பிடிக்க..!







