அடையாளம் காட்டப் போறன்.

ஓல்(O/L) பரீட்சையில்
ஓல்(all) எவ்(F) வந்ததும்
தலை கிறுகிறுக்க அலைந்த போது..
இயக்கத்துக்கு ஓடிடுவானோ..
பயந்தாள் அம்மா.

ஊருக்க வைச்சிருந்தா
உவங்கள் வந்து
இழுத்துக் கொண்டு போயிடுவாங்கள்
உங்கால உள்ள காணியை
வைச்சிட்டு
அனுப்பிவிடு இவனை
கொழும்புக்கு..
புத்தி சொன்னார் அப்பா.

கொழும்பில
போய் பொடி கெட்டிடும்
உந்த ஊரெல்லாம் போகுது கனடா
அனுப்பிவிடு அங்க..
பத்தாக்குறைக்கு பத்த வைத்தார் மாமா..!

நானும்
சோதனையில் பெயிலான (fail ஆன)
சோகம் தீர
புறப்பட்டேன்
தாண்டிக்குளம் தாண்டி
ரொராண்டோ.

வருசம் ஒரு 5 போய் இருக்கும்
நாலு காசு
நாய்படா பாடுபட்டு
வெள்ளைத் தோலிடம்
ஏச்சும் இழிவும் வாங்கி
உழைச்சது தான்..!
அம்மா கேட்டாள்
பொம்பிளை ஒன்று அனுப்பி வைக்கட்டே..??!

இளமைத் துடிப்பும்
சோடியாய் அலையும்
ரொராண்டோ வீதிகளும்
எனக்குள்ளும் மோகத்தைக் கிளறி விட
அம்மாவின் கேள்வியில்
நியாயத்தை தேடி..
ஓம் என்றேன்..!

கலியாணம் முடிக்க..
சிறீலங்கா போக ஏலாதாம்
ஏனென்றால் நான் அகதியாம்..
அட கடவுளே
செல் (shell) வந்து அறியா
ஊரை விட்டு ஒரு நாளும் ஓடினதில்ல..
ஓல் லில பெயிலானதுக்கு
அம்மாக்குப் பயந்து
கோவிலில போய் ஒளிச்சிருந்ததை தவிர..
எனக்கும் அகதிப் பட்டம்.

பொம்பிளைக்கு ஆசைப்பட்ட மனசு
சிங்கப்பூர் போயாவது
கொண்டு வரத் துடித்தது
அந்த ஊர் மறி ஆட்டை..!
கனடா குளிருக்க
இருந்த பசிக்கு
வேட்டைக்கு அது அவசியம்..
என்று கண்டதால
றிஸ்க்(risk) எடுப்பது
றஸ்கு சாப்பிடுவது போலாச்சு எனக்கு.

எல்லாம் நல்ல படியா முடிஞ்சு
அவளும் வந்து சேர்ந்தாள்.
மாதம் ஒரு 10 போய் இருக்கும்
யூனியரும் தவழ்ந்தது என் மடியில்.
அதுக்குள்ள
ஊரில பிரச்சனை என்று
அம்மாவும் அப்பாவும் கூட தங்கையும்
ஓடி வந்துவிட்டனர் கொழும்புக்கு.
ஊரே காலி.

நானும் ஓர் நாள்
தற்செயலாக செய்தி கேட்க..
முள்ளிவாய்க்காலாம் எண்டாங்கள்..!
என்ர பொடியும்
வெளியுலகம் பார்த்தது இல்ல..
நானும் புலி வால் பிடிச்சு அறிஞ்சதில்ல..
புறப்பட்டோம்.. போராட என்று
தமிழீழம் கேட்டு..
கட்டினோம் புலிக்கொடி.. காரெல்லாம்.
போதாக்குறைக்கு
பொடிக்கும் மூஞ்சியெல்லாம் புலி வேசம் வரைஞ்சு..
போட்டோம் கூச்சல்…
விடுப்போடு பொழுது போக்க
புலி ஆதரவும் காட்டி நிற்க..!
நாலு சனம் பார்த்துப் பேச..!

இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
அமைதி வந்திட்டு
அவங்கள் எல்லாம் செத்துட்டாங்கள்
போற வாற வழியில
வரியும் இல்ல புலியும் இல்ல..
ஆமிக்காரங்கள் இங்கிலீசில கதைச்சு
எங்கட பிள்ளைகளை கொஞ்சி மகிழுறாங்கள்
நீயும் கொண்டு போய் காட்டன்….
என்றார்
சுப்பர் மார்க்கட்டில் என்னோட
கூட மாரடிக்கும் மாதகல் மதன்.
போன மாதம் தான்
ஊருக்கு போய் வந்தவராம்.

மதனின் கதை கேட்டதில
எனக்கும் ஊருக்கு போற ஆசை முளைக்க
சும்மா கிடக்கேலாம
கடைசி நேரத்தில புலிக்கொடி புடிச்சது
பயமும் வந்து தொலைய..
தயங்கிப் போட்டு
என்ன ஊருக்குப் போவமே
உமக்கும் ஒரு ஆறுதலா இருக்கும்..
மனிசி என்று வந்து
வீட்டுக்கையே இருந்து
எனக்காய் உழைக்கும் அவளையும்
சும்மா கருத்துக் கேட்டன்.

ஓமங்க..
எங்கட பொடிக்கும் ஊர் காட்ட வேணும்
எனக்கும் அப்பா அம்மாவை பார்க்க வேணும்..
வாங்கோ போவம்.
ரிக்கட் போடுறதென்றால்
சிறீலங்கன் எயார் லைன்சில போடுங்கோ..
தமிழ் படம் போடுவாங்களாம்..
எங்கட ஊர் சாப்பாடாம்..
குணம் அன்ரி சொன்னவ..!

அப்ப சரி
நல்லூர் திருவிழாவும்
பார்க்கிற மாதிரி ரிக்கட் போடுறன்..
நீர் இப்பவே ரெடியாகும்
ஊரில உள்ளதுகளுக்கு
சும்மா வெறும் கையோட போக ஏலுமே
நாலு சாமான் வாங்கிச் சேரும்..
என்ன..!

நாலு சாமான் வாங்கிச் சேர்த்து
நாலு லக்கேஜ் கட்டி ஏத்தி
நானும் கட்டுநாயக்கா தாண்டி
ஊருக்கு போனது தான்..

ஊரெல்லாம் நல்ல கலகலப்பு..
உவங்கள் யாரோ
ஈழம் கேட்டு நாசமாக்கினதை தவிர
சனம் ஸ்கூட்டியில பறக்குதுகள்..
ஆமிகாரன் நின்று விசிலடிச்சு
எங்கட பெட்டையளுக்கு
விளையாட்டு காட்டுறான்
என்ன ஒரு பொழுதுபோக்கு
என்ன ஒரு இன ஐக்கியம்..!

கொழும்பில பார்த்த சிங்களம்
மணிக்கூட்டு கோபுரத்தில ஏறி நிற்குது..
மருதானையில பார்த்த புத்தர் சிலை..
மருதனார் மடத்திலும் இப்ப இருக்குது..
பஸ்ஸில பார்த்த ஆமத்துறு
ஆரிய குளத்தில குளிக்கிறான்..!

என்ர பொடிக்கு
உதுகள் தான் எங்கட அடையாளங்கள்
காட்டின திருப்தியோட
கல்வியங்காடு தாண்டி வரேக்க சொன்னன்..
இதுதான்
செங்குந்தா இந்துக்கல்லூரி
இங்க தான் நான் படிச்சது.
பொடியும் கேட்டான்
அதென்ன செங்குந்தா என்றால்
அது அந்த ஊரில இருந்த சாதி
அதென்னப்பா சாதி என்றால்..
காட்டுறன் வா..
அழைச்சுக் கொண்டு
யாழ்ப்பாணச் சாதியெல்லாம்
காட்டிப் போட்டு..
கடைசில..
விடை பெற்றோம்..
கனடாவுக்கு..!

லக்கேச்சுக்கு மேல..
காவுகின்றோம் கனக்க
தலை நிறைய…!
அடுத்த தலைமுறைக்கு
அடையாளமாய் காட்ட..!
அதோட அடுத்த முறைக்கு வரேக்க
கண்டிக்கும் போக வேணும்..
அதுவும் எங்கட நாடு தான்
என்றேன் பெருமையோடு
என்ர பொடிக்கு.

அது சரி
உவங்கள் உந்த சீமேந்து இல்லாத
காலத்திலும்
சக்கரையும் சுண்ணாம்பும் போட்டு கட்டினது
மாவீரர் இல்லங்கள் எண்டாங்கள்
அதுகளைக் காணவே கிடைக்கல்ல..
ஓடேக்க இடிச்சிருப்பாங்கள் போல..!

இப்ப
ஆமிக்காரன்
நல்லாத்தான் வைச்சிருக்கிறான் ஊரை..
ஓல் லில சமூகக்கல்வியில..
படிச்சதை வைச்சு
எவ் எடுத்ததில..
உதயமான அரசியல்
ஞானம்..
ஆராய்ச்சி செய்து கண்ட
உண்மை இது.

ஊரில அமைதி வந்திட்டு
சுதந்திரம் கிடைச்சிட்டு..
சரி எல்லாரும் வாங்கோ
ஒருக்காலாவது
சிறீலங்கன் எயார் லைன்ஸ் ஏறி
எங்கடையளுக்கு
அடையாளம் காட்ட
ஊருக்குப் போவம்
இதுவே கனடாவில
என்ர அரசியல் பிரச்சாரம் இன்று..!

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3030 other followers